பள்ளி மாணவர்களுக்கு நம் முன்னோர்களின் வரலாறு தெரிய வேண்டும் என்ற காரணத்திற்காக, வரலாற்றுப் பகுதியில் பண்டைய கால வாழ்க்கை முறை, பண்டைய காலத்து மன்னர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் புலவர்கள் பற்றிய தகவல்கள் உள்பட பல்வேறு உண்மைத் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, வரலாறு பிரிவில் தமிழ் மன்னர்களின் வீரம், கொடை மற்றும் ஆட்சி முறை பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இந்தியாவில் வாழ்ந்த அனைத்து மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் நம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்களின் வரலாற்றை சேர்க்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்ஷய் குமார் நடித்துள்ள ‘சாம்ராட் பிரித்விராஜ்’ படம் இன்று திரைக்கு வரும் நிலையில், குஜராத்தின் சோம்நாத் கோயிலுக்குச் சென்று படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டார் அக்ஷய் குமார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய மன்னர்களான பிரித்விராஜ் மறுறும் மகாரானா பிரதாப் உள்ளிட்டோர் பற்றிய வரலாறு பாடப் புத்தகங்களில் இல்லை. இவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால், இவர்களுடைய வரலாற்றை பாடப் புத்தகங்களில் இடம்பெற, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் அக்ஷய் குமார்.
இந்திய மன்னர்களின் வரலாற்றைக் குறித்து எவரும் எழுத முன்வருவதில்லை என வருத்தம் தெரிவித்தார் அக்ஷய் குமார். ஆகவே, தன்னுடைய வேண்டுகோள் குறித்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முகலாய மன்னர்களின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகங்களில் இருக்கக் கூடாது என்பது என்னுடைய வாதம் இல்லை எனத் தெரிவித்த அக்ஷய் குமார், அதே சமயத்தில் இந்திய மன்னர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டும் என்பதே என்னுடைய வாதம் என தெரிவித்தார். ஏனெனில் அவர்களும், அவர்களது ஆட்சி காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவர்கள் தான் என்று அக்ஷய் குமார் தெரிவித்தார்.
அக்ஷய் குமார் நடித்துள்ள சாம்ராட் பிரித்விராஜ் திரைப்படம், கடந்த 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராஜபுத்ர மன்னர் பிரித்விராஜ் சவுகானைப் பற்றியது. இந்தப் படத்தில் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லார், பிரித்விராஜ் சவுகானின் மனைவி சன்யோகிதாவாக நடித்துள்ளார். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கி உள்ளார்.
உலகின் மிக நீளமான தாவரம் கண்டுபிடிப்பு! ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள்!