நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 செ.மீ. மழை அளவு பதிவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.