தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,வரும் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் ,பருவமழையை தீவிரப்படுத்தக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி என்பது ,மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்தது .இது மெல்ல மெல்ல வலுவிழந்து ஆந்திர கடலோர பகுதியை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாக நேற்று முதல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க:‘விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது’-நியாய விலைக் கடைகளுக்கு அரசு எச்சரிக்கை
ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை ,காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்து வருகிறது . தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னையில் எழும்பூர் , சிந்தாதிரிப்பேட்டை ,சேத்துப்பட்டு ,நுங்கம்பாக்கம் ,திருவல்லிக்கேணி ,சேப்பாக்கம் , பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் மழையானது நேற்று முதலே பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் வட மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அக்டோபர் 9-ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .