திரைப்படம் பார்ப்பவர்கள் இடத்தில் பெரும்பாலும் கதாநாயகர்களின் பிம்பமும், கதாநாயகர்களின் உடல் மொழியும் தான் முதலில் வந்தடையும். கதாநாயகன் தாண்டி, அத்திரைப்படத்தை இயக்கியவரின் உடல் மொழியோ, அவரின் நடத்தையோ ரசிகர்களை அடைவது மிக அரிது. தமிழ் சினிமா வரலாற்றில் சில இயக்குனர்கள் மட்டுமே தன் படத்தின் மூலம் கதாநாயகனின் பிம்பத்தை தாண்டி ரசிகர்களை சென்றடைவார்கள். அவ்வாறாக ரசிகர்களை சென்றடைந்த இயக்குனர்களில் ஒருவர்தான், கெளதம் வாசுதேவ் மேனன்.
தனது முதல் படமான மின்னலே மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவத்தை கெளதம் வாசுதேவ் மேனன் நிறுவியது, சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தின் மூலம் தான்! அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு கதை சொல்லல் முறையை காக்க காக்க படத்தில் கெளதம் விதைத்திருந்தார். அப்படம் வெளிவந்த நாள் முதல் இன்று வரை கெளதமுக்கென ஒரு தனித்துவம் உள்ளது. அது அவரின் அத்தனை திரைப்படங்களிலும் வெளிப்படும்!
கதை சொல்லல் முறை, பாடல் ஒளிபரப்ப படும் முறை, நாயக நாயகிகள் பேசும் முறை, வசனங்கள் என அனைத்திலும் கெளதம் அவர்களின் தனித்துவத்தை நாம் காணலாம். இவரின் பல படங்களின் வசனங்கள் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக இவரின் காதல் வசனங்களை சொல்லலாம்.
உதாரணத்திற்கு, “ காதலை தேடிட்டு நம்ம போக கூடாது”, “வந்தா மச்சா.. என் வாழ்க்கையில ஒரு ட்ரெயின் ஏறி”, “ இந்த உலகத்துல இருக்க எல்லா பொண்ணுங்களையும் நான் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே உன்ன தவிர”, “ நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்ளோ அழகு…” இன்னும் ஏகபட்ட வசனங்களை நம்மால் கூற இயலும்.
மேலும், இவரின் படத்தில் இருக்கும் காதல் சொல்லும் காட்சிகள் அழகானவை. பிரம்மாண்டங்களை மட்டுமே நம்பாமல், அனைத்து காதல் சொல்லும் காட்சிகளிலும், காதல் சொல்லும் நபரிடத்திலும், அச்சுழலிலும் உணர்வுப்பூர்வமாக பிரம்மாண்டங்களை செலுத்தியிருப்பார், கெளதம் வாசுதேவ் மேனன். பல இளைஞர்கள் இவரின் திரைப்படம் பார்த்து காதலுக்கான புரிதலை உருவாக்கிக்கொண்டுள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பல படங்களில் தற்போது நடிகராகவும், கலக்கி வரும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு இன்று பிறந்தநாள்!
வெற்றிகளை சுவைக்க, ரசிகர்கள் இன்னும் கெளதம் வாசுதேவ் மேனனை அதிகம் கொண்டாடும்படியும் இந்த வருடம் அமைய, வாழ்த்துகள் சொல்வதோடு, லவ் இஸ் டிவைன் என்று கூறும் காதல்காரன் கெளதம் வாசுதேவ் மேனனிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறது, தினவாசல்!