ராஜஸ்தானில் இனிப்புக்கடை ஒன்றில் திருடிய திருடன் அந்தக்கடை முதலாளிக்காக கடிதம் எழுதியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. பல திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தாலும், வெகுசில திருட்டு சம்பவங்கள் அதிகளவில் பேசுபொருளாகி விடுகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்று அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சாலேமார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான், கோமராம். இவர் அம்மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்படி இருக்கையில், கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி கடையை கோமராம் திறந்துள்ளார்.
கோமராம் கடையைத் திறந்ததும், கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறியபடி இருந்துள்ளன. இதைக்கண்டு அதிர்ச்சியான அவர், கல்லாப் பெட்டியை திறந்துப்பார்த்துள்ளார். அதிலும் பணம் இல்லை. யாரோ நுழைந்து திருடிய அதிர்ச்சியில் இருந்த கோமராம் கையில், ஒரு பேப்பர் சிக்கியது.
அந்த பேப்பரில் இரு பக்கத்துக்கு திருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. அதிகப் பசியால் உங்கள் கடைக்குள் சாப்பிட நுழைந்தேன். அதன்படியே உங்கள் கடையில் கொஞ்சம் இனிப்புகளை சாப்பிட்டேன். எனக்கு சேவ் பிடிக்கும். அது இருக்கிறதா என கடையில் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பணம் எடுக்கும் எண்ணம் தொடக்கத்தில் இல்லை. ஆனால், எனது காதலிக்கு உடல்நலம் சரியில்லை ஆதலால் உங்கள் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் விருந்தாளி. நான் திருடியது குறித்து போலீசாரிடம் நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றும் அந்த திருடன் எழுதியுள்ளார்.
இக்கடிதத்திற்கு பிறகு, கோமராம் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், இந்த கடிதம் தொடர்பாகவும், திருட்டுச் சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கோமராம் கடையில் இனிப்புப் பொருட்களும், ரூ.7000 ரொக்கமும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கடலுக்குள் பேனாவை வைத்தால், நான் உடைப்பேன்’ – சீமானின் பேச்சால் பரபரப்பு!