ரயில் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தாலும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு அவை ரத்து செய்யப்பட்டால், அதற்கான கட்டணம் என்பது வசூலிக்கப்படும். தற்போது அதற்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது.
இதுகுறித்து, நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிவில் தெரிவித்துள்ளதாவது:
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட பின் ரத்து செய்தால் இனி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
முதல் வகுப்பு, ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு ஒப்பந்தம். அதன்படி, ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரயில்வே வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. முன்பதிவை ரத்து செய்யும் போது ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
ரத்து கட்டணம் என்பது செலுத்தப்படும் தொகை ஆகையால், அதற்கு ஜிஎஸ்டி உண்டு.
உதாரணமாக, ரயில் டிக்கெட்டை ரத்துசெய்ய ரூ.240 கட்டணம் வசூலித்தால், அதற்கு ரூ. 12 ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும்.
விமானப் பயணம் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பதிவை ரத்து செய்தாலும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
இவ்வாறு, நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.