ஆளுநரும் தமிழக அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.
ஆளும் திமுக அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகின்றன. அதே சமயம், சமீபத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவரான டி.ஆர். பாலு, ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட அழைத்திருந்தார்.
இதனிடையே, ஆளுநரும் அரசும் இணைந்து செய்லபட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஜனநாயக அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். நிர்வாகமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் இருக்கும்.
ஆளுநர் இதில் குறுக்கிடவும், எதிர்க்கவும் கூடாது. ஆளுநரின் பணி என்பது அரசால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தேவைப்பட்டால் ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை அரசிடம் தெரிவித்து, குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாஜக ஆளாத மாநிலங்களில் அங்கு பொறுப்பிலிருக்கின்ற ஆளுநர்கள், அரசுக்கு எதிரானப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். இதனால், மாநில மக்களுக்கு நன்மை கிடைக்காது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் அது சட்டமாகும். அதனால், மாநில முதல்வரும் ஆளுநரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். அப்போது மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சியை அமைப்போம். அதற்கான வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறோம் . அதற்கேற்றபடியான நடவடிக்கைகளையே 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் கடைப்பிடிப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய இளைஞருக்கு.. ஓடி வந்து முதலுதவி செய்த தமிழிசை; குவியும் பாராட்டுக்கள்