அண்ணாமலை தன்னை முதல் நாளில் இருந்தே கட்சியிலிருந்து வெளியேற்ற விரும்பியதாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
கட்சிக்கு களங்கம் உண்டாகும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம், கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே ஆறு மாத காலத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு காயத்திரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “நன்றி அண்ணாமலை ஜி. 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்.
நான் பாஜகவுக்கு எதிரானவள் என்பதை ஏற்க மாட்டேன். அப்படி யார் சொன்னாலும் அடிப்பேன். எந்த ஒரு தனிமனிதனும் ஒரு கட்சி அல்ல. விசாரணையின்றி அதிகாரம் எந்த முடிவையும் எடுப்பது இப்படித்தான். அவர் முதல் நாளிலிருந்தே என்னை வெளியேற்ற விரும்பினார். நான் உறுதியுடன் திரும்பி வருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.