காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக விளங்கி வந்தார். கடந்த நவம்பர் மாதம் ‘பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்’ என்று அண்ணாமலை அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது;
கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவது என்று நான் முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை.
அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது.
பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, விடியோக்களை போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன்.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இசைவெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த விதம்… கருத்து தெரிவித்த இசையமைப்பாளர்..