இலவசங்கள் மிக முக்கியமான பிரச்சனை என்றும் அதன் மீதான விவாதம் தேவை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
மேலும், இலவசங்கள் குறித்த உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குகளை தடுக்க முடியாது என்றும் அதே சமயத்தில், இலவச பொருள்களையும் இலவச திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது முந்தைய விசாரணையில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற விசாரணையில், ‘இலவசங்கள் மிக முக்கியமான பிரச்சனை. அதன் மீது விவாதம் தேவை.
நாட்டில் இலவசங்களுக்கும் மக்கள் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்து எது இலவசம் எது மக்கள் நலத்திட்டம் என்று முடிவு செய்ய வேண்டும். காரணம், சில மாநிலங்களின் மக்கள் நலத்திட்டங்களால் மக்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைகிறார்கள்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்மனுதாரர்களாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.