குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் பெய்த மழையால், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக சென்னை ஓட்டேரி கால்வாயில் முறையாக தண்ணீர் செல்லவில்லை என மக்கள் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த கால்வாயை தூர்வார மாநகாரட்சி முடிவு செய்து அதன் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியின் போது கால்வாயில் கொட்டப்படும் குப்பைகளால் தான் தண்ணீர் செல்வது தடைபடுவது தெரியவந்தது.
இந்நிலையில், பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஓட்டேரி கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து கூடுதல் தலைமை செயலாளர், மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, ‘கால்வாய்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.’ என்று மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்தனர்.
இதையும் படிங்க: பல்லுயிர்களையும் பாதுகாக்க… காவிரி கரையில் தமிழகத்தின் 17வது வன விலங்கு சரணாலயம்! – ஒரு சின்ன பார்வை