அரசு ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் தனியார் ஆம்புலன்சில் செல்லும் அளவிற்கு பண வசதியில்லாததால் உயிரிழந்த மகளின் உடலை தோளில் சுமந்து நடந்து சென்றிருக்கிறார் தந்தை. மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தையின் வீடியோ வலைத்தள பக்கங்களில் வைரலாகி அரசு ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டம். இம்மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பக்ஸ்வாஹா சுகாதார மையத்திற்கு கடந்த திங்கட்கிழமை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் டாமோவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டீற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெகுநேரம் காத்திருந்தும் எந்த ஒரு ஆம்புலன்ஸ்யும் வரவில்லை.
பின்னர் தன் மகளின் உடலை தந்தை தோளில் சுமந்து தூக்கி சென்றிருக்கிறார். சிறுமியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்களிடம் ஆம்புலன்ஸ் கேட்டபோது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை . தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் அளவிற்கு போதிய பணம் இல்லை. அதனால் மகளின் உடலை போர்வையில் போர்த்தி நடந்து சென்று பஸ்ஸில் ஏறி பக்ஸ்வாஹான்னர் சென்றுவிட்டார்.
அங்கிருந்து பவுடி கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு வாகனத்தை வழங்குமாறு நகர பஞ்சாயத்திடம் கேட்டிருக்கிறார். அவர்களும் மறுத்துள்ளார்கள். மறுபடியும் மகளை தூக்கிக்கொண்டு நடந்தே சென்றிருக்கிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனால் டாமோ மருத்துவமனையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் இதனை மறுத்துள்ளார் . எங்களிடம் யாரும் ஆம்புலன்ஸ் கேட்டு வரவில்லை. எங்களிடம் வாகனங்கள் இருக்கின்றன. எங்களுக்கு தெரிந்தால் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அல்லது வேறு ஏதேனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் இருந்து நாங்கள் வாகனம் ஏற்பாடு செய்து இருப்போம் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:
“நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். கவலையாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் – திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை!