மகளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுத்து அவரை ஆற்றில் தள்ளி கொன்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் சித்தனஹல்லி கிராமத்தைச் சேந்தவர் சுகனஸ்ரீ. இந்தப் பெண் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே தந்தை ஓம்காரப்பா புத்திசாலித் தனமாக யோசித்து தனது இரு சக்கர வாகனத்தில் கோயில், திரையரங்கு என அழைத்து சென்று மகளின் முடிவை மாற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு சுகனஸ்ரீ மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
மேலும் தந்தை நகை கடைக்கு அழைத்து சென்று தங்க மோதிரத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே தந்தை எவ்வளவு கூறியும் மகள் அதனை ஏற்கவில்லை.
இதன் காரணமாக கோபம் அடைந்த தந்தையான ஓம்காரப்பா நள்ளிரவு வீடு திரும்புகையில் தனது மகளை துங்கபத்ரா ஆற்றில் தள்ளிவிட்டார். மகள் சுகனஸ்ரீ காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் அவர் அங்கிருந்து நேராக திருப்பதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி மகள் காணவில்லை என அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் குடந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், மகள் காணாமல் போன நாளில் இருந்து தந்தையும் வீட்டில் இல்லை என சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது மகளை தனது நண்பனின் உதவியுடன் ஓம்காரப்பா ஆணவக்கொலை செய்ததாக தெரியவந்தது.
மேலும் திருப்பதி சென்ற ஓம்காரப்பா தனது செல்போனை ஆப் செய்துவிட்டு கோப்பில் நகரில் தலைமறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் ஓம்காரப்பாவை கைது செய்து பெல்லாரி அழைத்து வந்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது, தனது மகளை தான் ஆணவக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஆற்றில் தள்ளப்பட்ட சுகனஸ்ரீ உடல் கிடைக்காததால் தேடல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்- அமைச்சர் ரகுபதி