புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபானங்கள் தயாரித்து கடத்தப்படுவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலால்துறை தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், காவலர்கள் குமரன், விஜயன், வீரமுத்து ஆகியோர் சேதராப்பட்டு பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சேதராப்பட்டு கரசூர் பிடாரி அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தனியாக கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டு இருந்தது.
அந்த கண்டெய்னரை திறந்து சோதனை செய்தபோது, அதில் தவிடு மூட்டைகளுக்கு இடையே 153 பெட்டிகளில் 7,344 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அது போலி மதுபானம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்ணர் லாரி, போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.11 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புடைய மதுபானங்களை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து கலால்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கண்டெய்னர் லாரி யாருக்கு சொந்தமானது.
போலி மதுபானம் எங்கு தயாரிக்கப்பட்டது? யார் தயாரித்தார்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கரசூரை சேர்ந்த சரவணன், சித்தார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
‘ஆபரேஷன் விடியல்’; பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் வாலிபர் கைது!