ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டாவது நாளாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேசமயம், அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி செல்லாமல் தபால் ஓட்டாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களிடம் இருந்து நேற்று 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து காவல்துறை பாதுகாப்பபுடன் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று தபால் ஓட்டை பதிவு செய்தனர். பிறகு அந்த வாக்குப்பெட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வீட்டில் இல்லாதவர்களிடம் இன்று வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இன்றும் அவர்கள் இல்லாதபட்சத்தில் மீண்டும் வருகிற 20 ஆம் தேதி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள்.
மேலும் வருகிற 27 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின்போது அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஓட்டுனரும், நடத்துநரும் இதை செய்தாகவேண்டும் – அரசு அதிரடி உத்தரவு!