இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) அன்று தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுவதால், அந்த அதிருப்தியில் பதவியை ராஜிநாமா செய்வதாக இருவரும் கூறியுள்ளனர். இங்கிலாந்து நிதியமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த ராஜிநாமா, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிஞ்சர், பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக புகார்கள் வந்தன. நாடாளுமன்ற உறுப்பினரான பிஞ்சரின் இந்த செயல் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கிறிஸ் பிஞ்சர் தனது பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட கிறிஸ் பிஞ்சருக்கு பதவி வழங்கியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
பதவி விலகல் குறித்து ரிஷி சுனக், ‘இந்த அரசு திறமையுடன் சரியான முறையில் செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்பு சரியானது. நான் கடைசியாக வகிக்கும் அமைச்சர் பதவி இதுவாகவே இருக்கும்.’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The public rightly expect government to be conducted properly, competently and seriously.
I recognise this may be my last ministerial job, but I believe these standards are worth fighting for and that is why I am resigning.
My letter to the Prime Minister below. pic.twitter.com/vZ1APB1ik1
— Rishi Sunak (@RishiSunak) July 5, 2022
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 2009ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
2020ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியைக் கைப்பற்றிய போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக ரிஷி சுனக் பொறுப்பேற்றார். கொரோனா காலகட்டங்களில் இங்கிலாந்து நிதித்துறையை திறமையாக ரிஷி சுனக் கையாண்டார். போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு, பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபராகக் கருதப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமராக நீடிக்க போரிஸ் ஜான்சன் தகுதி இழந்து விட்டதாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கான்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள் கட்சியின் உறுப்பினர் குழு தலைவர் கிரஹாம் பிராடியிடம் கடிதம் அளித்தனர்.
இதன் அடிப்படையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 211 எம்.பி-க்களின் ஆதரவு வாக்குகள் பெற்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிறிஸ் பிஞ்சர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததாக கடந்த புதன் கிழமை (ஜூன் 29) குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்ட சில நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
இருவரது ராஜிநாமாவை அடுத்து, நிதியமைச்சராக நதீம் சஹாவியையும், சுகாதாரத்துறை அமைச்சராக ஸ்டீவ் பார்க்லேவையும் நியமித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்ஸ்-ரஷ்யா அதிபர்கள் பேசிய போர் பற்றிய தகவல்கள் கசிவு