தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வானது கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் சேர இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவர்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவர் சேர்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.