‘வெந்து தணிந்தது காடு’ பட க்ளைமாக்ஸில் நடிகர் சிலம்பரசன் ‘பத்துதல’ கெட்டப்பில் வந்தது சங்கடமாகவும் வருத்தமாகவும்தான் இருந்தது என இயக்குநர் ஓபிலி. கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், இந்த பத்து தல.
நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஓபிலி. கிருஷ்ணா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நம்ம சத்தம்’ பாடல் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஓபிலி. கிருஷ்ணா, சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் பத்து தல படத்தின் கெட்-அப்பில் நடித்தது சங்கடமாக இருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘வெந்து தணிந்தது காடு’ பட க்ளைமாக்ஸில் நடிகர் சிலம்பரசன் ‘பத்துதல’ கெட்டப்பில் வந்தது சங்கடமாகவும் வருத்தமாகவும்தான் இருந்தது .
அதேநேரம், சிம்பு எனக்கு நல்ல நண்பர். மேலும், கெளதம் மேனனும் எனது குரு மற்றும் நல்ல நண்பர் . அது மட்டுமில்லாமல் அவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதனால் கெட்-அப் விஷயத்தை பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன்.
மேலும், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ‘பத்துதல’ தோற்றத்தை ரசிகர்கள் கவனித்து ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியே.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பத்து தல படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 18-ஆம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘முதலமைச்சர் என்றால் முதுகெலும்பு வேண்டும்’ – விமர்சித்த சிபிஐ செயலாளர்