மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவினை, சிவசேனா கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் தனது பெரும்பான்மையினை நிரூபிக்க முடியாமல் உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியினை ராஜிநாமா செய்தார்.
இதன் பிறகு, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவரான தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே கூட்டணி அமைத்தார். ஷிண்டேவின் கூட்டணியினால் எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஏக்நாத்ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சிவசேனா கட்சிக்கு ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்துள்ளதாகக் கூறி கட்சியிலிருந்து அவரை நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘சிவசேனாவுக்கு துரோகம் செய்தவர்கள் தற்போது, ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை சேர்ந்தவர் என்று பிரசாரம் செய்கின்றனர். அவரை சிவசேனா ஆட்சியின் முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது. சிவசேனாவில் இருந்து சென்ற எம்எல்ஏக்கள் மக்கள் நம்பிக்கையுடன் அளித்த வாக்குகளை வீணாக்கியதுடன், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி விட்டனர்.’ என்றார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, புதிதிதாக அமைந்த அரசின் அமைச்சரவைக் கூட்டமானது இன்றும் நாளையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
15 கோடி மதிப்பிலான சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்