சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக 7 நாள்களில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மேலும், சமீபகாலமாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5-ம் தேதியில் இருந்து 11-ம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்பனை செய்ததற்காக வழக்குகள் பதியப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள், 4 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.