இங்கிலாந்து அமைச்சரவையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகுவதால், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அவரது சொந்த கட்சியினரே எதிராகத் திரும்பியுள்ளனர். முன்னதாக நேற்று (ஜூலை 06) இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவத் ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து அரசின் பல அமைச்சர்களும் ராஜினாமா செய்து வருவது போரிஸ் ஜான்சன் அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான கிறிஸ் பிஞ்சர், கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி அன்று மது அருந்தி விட்டு இரண்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த விவகாரம் இங்கிலாந்தில் பெரிய அளவாகப் பேசப்படவே, பிஞ்சர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஜூலை மாதம் 5ம் தேதி பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘கிறிஸ் பிஞ்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது தவறு. இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறினார்.
போரிஸ் ஜான்சனின் மன்னிப்பைத் தொடர்ந்து சில நிமிடங்களில் இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகிய இருவரும் தங்களது ராஜிநாமாவை அறிவித்தனர்.
போரிஸ் ஜான்சனின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்ததால் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ததாக இரு அமைச்சர்களும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த இருவரைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ், வடக்கு அயர்லாந்துக்கான மாநில செயலாளர் பிராண்டன் லெவிஸ், கான்செர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவரான பிம் அஃபோலமி, வர்த்தக தூதர் ஆண்ட்ரூ, அமைச்சக உதவிப் பணியில் இருந்த ஜோனதன் குல்லிஸ் மற்றும் சாகிப் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
எதிர்கட்சிகள் ஒரு பக்கம் போரிஸ் ஜான்சனின் ஆட்சி பற்றி விமர்சித்து வரும் நிலையில், தனக்கு எதிராக சொந்த கட்சியில் உள்ளவர்களே திரும்பியது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.