இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆளுநர் அநாகரீகமாக நடந்து கொண்டார் என அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஆளுநரின் இன்றைய உரை முக்கியமாக பார்க்கப்பட்டது.
அதன்படியே, இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தையை படிக்காமல் அவர் புறக்கணித்துள்ளார். இத்துடன், தமிழ்நாடு என்று வார்த்தை இடம்பெற்ற ஒவ்வொரு வாசகத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநரின் உரை குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது தவறு என்று கண்டனம் தெரிவித்தார். ஆளுநரை முதல்வர் விமர்சித்தார். இதனால் சர்ச்சை எழுந்தது. இதனால், தேசிய கீதம் இசைத்து கூட்டம் முடிப்பதற்கு முன்னதாகவே பாதியிலேயே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அவைத்தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனை அளிக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது;
ஆளுநர் தன் உரையில் பல பகுதிகளை விடுத்தும், சில பகுதிகைள சேர்த்தும் வாசித்துள்ளார். அந்த வகையில் சட்டப்பேரவையில் ஆளுநர் அநாகரீகமாக நடந்து கொண்டார். மத்திய அரசு தயாரித்த உரையையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு ஆளுநர் தேசிய கீதம் வாசிக்கப்பட்ட பிறகே அவையிலிருந்து வெளியேற வேண்டும் என்பது மரபு. ஆனால், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே, பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். இது ஒட்டுமொத்த நாட்டையும் அவர் அவமதித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய ஆளுநர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? என்று தெரியவில்லை.
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
மும்பை ரயிலில் வலியில் துடித்த இளம்பெண்; உதவிகரம் நீட்டிய பரிசோதகர்கள்