சிவகாசியில் இதுவரை 95 சதவீதம் விற்பனை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தீபாவளி பண்டிகையில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது பட்டாசுகள். பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி என்பது முடிவதே இல்லை. திருப்தியும் தருவதே இல்லை. தற்போது, தீபாவளி வருகிற 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் பட்டாசுகளை தேடித்தேடி பிடித்தவாறு வாங்கி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருப்பது சிவகாசி. இந்நிலையில், நெருங்கி வரும் தீபாவளி காரணமாக சிவகாசியில் கூட்டம் அலைமோதுகிறது. சிவகாசி மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பட்டாசு விற்பனை மும்முரமடைந்துள்ளது. பட்டாசுகளை பேருந்து மற்றும் ரயிலில் எடுத்துச் செல்ல அரசு தடை விதித்தும், மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து பட்டாசுகளை வாங்கிக்கொண்டு செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுவரையில் 95 சதவீதம் விற்பனை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை பட்டாசு உற்பத்தி குறைவாகவே இருந்தது. ஆதலால்தான், விற்பனை வேகமாக முடிந்துவருகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிவகாசியில் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையில் 125-க்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் ! ‘பாட்டாளி மாடல்’ ஆட்சி எப்படி இருக்கும் என விவரித்த அன்புமணி