டென்மார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
டென்மார்க், கோபன்ஹேகன் தலைநகரில் உள்ள விமான நிலையம் அருகே ஒரு வணிகவளாகத்தில் இந்தச் துப்பாக்கிசூடு நடந்துள்ளது.
இச்சம்பவம் நடைபெற்ற அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், வணிக வளாகத்துக்குள் சென்ற மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.
இதனால், அச்சமடைந்த மக்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறியடித்து வெளியேறினர். இச்சம்பவத்தின் போது வணிக வளாகத்தில் இருந்த பலர் படுகாயமடைந்தனர். இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய 22 வயதுடைய இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது வணிக வளாகத்திலிருந்து தப்பி ஓடிய பொதுமக்கள் எடுத்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.