டபிள்யுபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தில்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
டபிள்யுபிஎல் எனும் மகளிர் ஐபிஎல் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, தில்லி அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஷஃபாலி வர்மா 17 ரன்களிலும், மாரிஸேன் காப் 16 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, ஒரு புறம் சிறப்பாக ஆடிய மெக் லேனிங் 70 ரன்கள் விளாசிய நிலையில் பெவிலியன் திரும்பினார். தில்லி அணியின் கடைசி விக்கெட்டாக அலிஸ் கேப்சி 21 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
மொத்தத்தில், 20 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களுடனும், ஜெஸ் ஜோனசென் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். யுபி அணித் தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில், ராஜேஷ்வரி கெய்க்வாட், டாலியா மெக்ராத், சோஃபி எக்லஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
இதைத்தொடர்ந்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுபி வாரியர்ஸ் களமிறங்கியது. அலிசா ஹீலி 24, ஷ்வேதா ஷெராவத் 1, கிரண் நவ்கிரே 2, தீப்தி சர்மா 12, தேவிகா வைத்யா 23 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிய மறுபுறம் டாலியா மெக்ராத் ஒற்றை ஆளாக அணியை வெல்ல வைக்க போராடிக்கொண்டிருந்தார். அவர் 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிம்ரன் ஷேக்கும் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
யுபி வாரியர்ஸ் அணி போராடியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களே சேர்த்தது. இதனால், தில்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. தில்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனசென் 3, மாரிஸேன் காப், ஷிகா பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
‘பெண்கள் தங்களின் கூண்டை உடைத்தல் அத்தியாவசியம்’ – மகளிர் தின சிறப்பு கட்டுரை!