நேற்று மும்பையிலுள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடந்த 64வது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இரண்டு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கினைத் தேர்ந்தெடுத்தது.
முதல் இன்னிங்ஸ்:
தொடக்கவீரராகக் களமிறங்கிய டெல்லி அணியின் டேவிட் வார்னர் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ராகுல் சஹாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பின்னர் வந்த மிச்சேல் மார்ஷ், சர்பராஸ் கானுடன் கூட்டணி சேர்த்து ரன்கள் குவித்தார்.
48 பந்துகளை எதிர்கொண்ட மார்ஷ் 63 ரன்களை எடுத்துருந்தார். உடன் ஆடிய சர்பராஸ் கான் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான், அர்ஷ்தீப் சிங் பந்தில் ராகுல் சஹாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு அடுத்து வந்த லலித் யாதவும் தன் பங்குக்கு 24 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. அக்சார் படேல் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
பஞ்சாப் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளும், ரபாடா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
இரண்டாம் இன்னிங்ஸ்:
160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்கம் சிறப்பாய் இருந்தது. ஜானி பேர்ஸ்டோ 15 பந்துகளில் 28 ரன்களும், ஷிகர் தவான் 16 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தினை அளித்தனர்.
ஆனால், அவர்களுக்குப் பிறகு வந்த பனுக்கா ராஜபக்ஷா(4), லிவிங்ஸ்டன்(3), மயங்க் அகர்வால் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 8 ஓவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது பஞ்சாப் அணி.
இதன் பின்னர் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா நிலையாக ஆடி அணியின் ஸ்கோரினை உயர்த்த உதவினார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 44 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்குர் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதி வரை போராடிய புஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ராகுல் சஹார் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், அக்சார் படேல் மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டினையும், அன்ரிச் நோர்ட்ஜெ ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
நான்கு விக்கெட்டுகள் எடுத்த தாக்குர், ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்திற்கு டெல்லி முன்னேறியுள்ளது.
பெங்களூரு அணியும் 14 புள்ளிகள் வைத்திருந்த போதிலும், பெங்களூரு அணியினை விட நல்ல ரன் ரேட்டினை டெல்லி அணி கொண்டிருப்பதால் 4 இடத்தில் உள்ளது.
பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இரண்டு அணிகளுமே அப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
டெல்லியுடனான போட்டியில் தோற்றத்தின் மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் மும்பை அணியினை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! இனி கெத்துதான்!