மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்தது. பாகிஸ்தானை தவிர இந்திய அணி மற்ற அனைத்து அணிகளுடனும் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா – தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையும் படிங்க:தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலாயம் – வெளிவந்த அறிவிப்பு!
முதலில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணி தரப்பில் ஷெஃபாலி வர்மா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 36 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி களமிறங்கியது.
ஆனால், தாய்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணித் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம், மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.