சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா இந்திய அளவிலான பூங்காக்களின் தரவரிசைப் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன. இந்நிலையில், பூங்காக்களின் இயக்குநர்களுக்கான மாநாடு ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பூங்காக்களின் மேம்பாடு, செலவினம் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
மேலும், அந்த மாநாட்டில் மத்திய உயிரியல் பூங்காக்களுக்கான ஆணையம் பூங்காக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரப் பட்டியலை வெளியிட்டது.
அந்தப் பட்டியலின் படி, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜீலிங் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியல் பூங்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பூங்காவுக்கு அடுத்தபடியாக, சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா 2-ஆவது இடத்தையும், கர்நாடகத்தின் மைசூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாமாராஜேந்திரா உயிரியல் தோட்டம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
டார்ஜீலிங் உயிரியல் பூங்கா, கிழக்கு இமயமலையில் காணப்படும் பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா கரடி போன்ற அழிவு நிலையை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.