நேற்றைய நாக்-அவுட் சுற்றில் ஜப்பான் அணியை வீழ்த்தி குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இச்சுற்றில் விளையாடும் அணிகள் காலிறுதிக்கு செல்லும் கனவுகளோடு தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய நாக்-அவுட் சுற்றில் ஜப்பான் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. யார் காலிறுதிக்கு செல்லப் போகிறார்கள் என்று ஆரம்பம் முதலே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இரவு 8.30 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், ஜப்பான் அணி வீரர் மேடா ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், ஜப்பான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் குரோசியா வீரர் பெரிசிக் ஒருகோல் அடித்தார். இவரின் இந்த கோல் மூலம் ஆட்டமானது சமனில் சென்றது.
ஆனால், இந்த சமனை குலைக்க இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டமானது, 1:1 என்ற கோல் கணக்கில் சமனின் முடிந்தது.
கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நாக்-அவுட் சுற்றுகளில் சமன் செல்லுபடியாகாது என்பதால், டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. இதில், குரோசியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குரோசியா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
துணிவு அப்டேட்; டிசம்பர் 9-ஆம் தேதி அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்…