மகளிர் ஐபிஎல் அறிமுக சீசனுக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் 409 வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவித முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டை முன்னெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த ஆண்டு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, மகளிர் ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, மகளிர் ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் 5 அணிகள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 18 வீராங்கனைகள் சேர்க்கப்படுவர். அதில் 6 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடங்குவர். அதுவே பிளேயிங் லெவனில் ஒரு அணியில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அந்த 5 பேரில் நால்வர் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக இருக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் துணை உறுப்பினர் நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் இதர அணிகளுடன் 2 ஆட்டங்களில் மோதும் வகையில் 20 லீக் ஆட்டங்கள் விளையாடப்படும். அதன் முடிவில் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெறும். 2 மற்றும் 3-ம் இடம் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக எலிமினேட்டரில் மோதும்.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த முதல் மகளிர் ஐபிஎல் போட்டியானது, வரும் மார்ச் 4 முதல் 26-ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 409 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அந்த அணிகள் தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதற்கான ஏலம் வரும் 13- ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. மொத்தம் 90 வீராங்கனைகள் அப்போது ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். அதில் அந்நிய வீராங்கனைகளுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்காக 246 இந்திய வீராங்கனைகள், 163 அந்நிய வீராங்கனைகள் என 409 பேர் அடங்கிய பட்டியல் தயாராகியுள்ளது. இதில் 202 பேர் அனுபவ வீராங்கனைகளாகவும், 207 பேர் புதுமுக வீராங்கனைகளாகவும் உள்ளனர்.
இந்த ஏலத்தில் எடுப்பதற்கான கையிருப்பாக 5 அணிகளுக்கும் தலா ரூ.12 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் மாதம்; இவையெல்லாம் அவசியமா? – இன்றைய ஸ்பெஷல்!