சென்னையில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 447 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இரண்டு நாட்களாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், வார இறுதி நாட்களில் தீவிர கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 16 சமுதாய நல மையங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், அருகில் உள்ள மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். வீட்டு தனிமையில் இருப்பவர்கள், கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள பிற நபர்களும் முக கவசம் அணிதல் அவசியம். மாநகராட்சியில் 1.10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களாக, தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது.
கடந்த சில நாள்களில், பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே, பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பின் சுய சிகிச்சை மேற்கொள்ளாமல், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.