அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தி, அவர்களுடன் உரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
மாணவச் செல்வங்களே நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காலையும், மதியமும் உணவளித்து உங்களுடைய மற்ற தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்.
பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டிகளாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணை வடிவமான திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் எண்ணியதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினேன்
ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆதிமூலம் பள்ளியில் இருந்து காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் அவர்கள் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்க தீர்மானம் நிறைவேற்றிய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு நாம் காலை உணவு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
இவ்வாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
‘திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்’ என முதல்வர், மதுரை மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்பப் பள்ளியின் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.