தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணி அளவில் இருந்து நடைபெற்று வருகிறது. மொத்தமாக தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு என தமிழக காவல்துறை சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை ஏழு மணியளவில் இருந்தே பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்களித்தார்.
வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் ஆகியோர் வாக்களித்தனர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மா.சுப்பிரமனியன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்திவிட்டு சென்றார்.