நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் ஆரம்பித்ததில் இருந்தே கோவை மாநகராட்சியில் பல நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது தற்போது ஆளுங்கட்சியாய் இருக்கும் திமுக கோவைப்பகுதிகளில் குறைந்த வாக்கு சதவீதத்தையே பெற்றன.
கோவை மாநகராட்சியில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று சட்ட மன்ற தேர்தலின் போது ஏற்பட்ட கலங்கத்தை மறைக்க திமுக முயன்று வருகிறது.
இம்முயற்சியில், திமுக பல குறுக்கு வழிகளை பின்பற்றுவதாகவும், பண பொருள் விநியோகம் செய்வதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டன. ஆனால் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுவதாய் இல்லை!
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.
மேலும், குண்டர்களையும், ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற கொறடா திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதாக தெரிவித்த அவர், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகவும் கூறினார்.