ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட தமிழக அரசு சார்பில் ரூ.2.50 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு உள்பட பல்வேறு அமைப்புகள் எடுத்து வருகின்றன. இச்சூழலில், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவிட அங்குள்ள தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பானது ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஹூஸ்டன் பல்கலைக்கழகம் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டை பேணிக்காத்து வருகிறது.
இப்படியான பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைத்திடத் தேவையான நிதியை வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.2.50 கோடிக்கான காசோலையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்வின் போது, தொழில்கள், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வ.உ.சி. பெயரில் கப்பலோட்டிய தமிழன் விருது: அறிவித்தது போலவே வழங்கினார் முதலமைச்சர்