சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இன்று காலை, ஓ. பன்னீர்செல்வம் பசுமை வழிச் சாலையிலிருக்கும் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றார். இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் திரண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அமைத்திருந்த தடையை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தெரிந்தனர். மேலும், தலைக்கவசம் அணிந்துக் கொண்டு ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில், சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதோடு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கு கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு அருகில் இருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒன்றாக நிற்பது போன்ற பேனர்களில், எடப்பாடி பழனிசாமியின் உருவத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.
இதனியடையே, தடையை உடைத்து அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தனிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட செயலாளர் வி.என்.ரவி உள்பட, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலரையும் கைது செய்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு