ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் சென்னை வானகரம் ஶ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியது. இப்பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து, அவரை உள்ளே அழைத்து சென்றனர்.
அந்நேரத்தில், அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். அதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு நீடித்தது. இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர அதிமுக தலைமை அலுவலகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதோடு, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா என்ற விதி ரத்து- இபிஎஸ் அதிரடி