சீன அரசு கொரோனா குறித்த விஷயங்களை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகிப்போகின.
முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது.
இந்தச் சூழலில்தான், சென்ற ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று குறைந்து வருவதாக, கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டன. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவும் சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், உயிரிழப்புகளும் நேர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பெய்ஜிங் மகாணத்தில் உள்ள மயானங்களில் அதிகளவில் கடந்த சில தினங்களாக உடல்கள் வருவதாகவும், அவற்றுள் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் உடல்கள் இருப்பதாகவும், அந்த உடல்களுக்கு மயானங்களில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படியான தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து, ஊடகங்கள் சீனாவின் அறிக்கை குறித்து ஆராய ஆரம்பித்தன. அதன்படி, டிசம்பர் 4-ஆம் தேதியில் இருந்தே சீன அரசு கொரோனா சமந்தமான உயிரிழப்புகளை பதிவு செய்யவில்லை என்று அறியப்பட்டுள்ளது. சீனா சுகாதார ஆணையம் இதுகுறித்து எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால், சீன அரசு கொரோனா குறித்த விஷயங்களை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிரான்ஸ் தோற்றாலும் ரசிகர்கள் மனதில் இடம்படித்த எம்பாப்வே; வைரலாகும் ட்விட்!