சத்தீஸ்கர் மாநிலத்தில் தாய் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காட்டுப்பன்றியை எதிர்த்து போராடி மகளைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் உள்ள தெளியமர் கிராமத்தில் நேற்று துவாஷியா பாய் (45) மற்றும் அவரது மகள் ரிங்கி (11) ஆகிய இருவரும் அங்குள்ள பண்ணைக்கு மண் எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது துவாஷியா கோடாரி கொண்டு மண்ணைத் தோண்டி எடுத்துக்கொண்டிருக்க, அந்தப்பக்கமாக வந்த காட்டுப்பன்றி, அவரது மகள் இருக்கும் திசையை நோக்கி சென்றது. மேலும் துவாஷியா தனது மகளைக் காப்பாற்றுவதற்காக கோடாரியைக் கொண்டு காட்டுப் பன்றியுடன் நேருக்கு நேர் சண்டையிட்டுள்ளார். மேலும் போராடி காட்டுப்பன்றியைக் கொன்றார். இதில் துவாஷியாவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே துவாஷியா உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறுமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் துவாஷியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வனவிலங்கு தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தற்போது வழங்கப்பட்டது. அதோடு முறையான நடைமுறைகள் முடிந்த பிறகு, மீதமுள்ள 5.75 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் இனி இப்படித்தான்… வெளிவந்த அறிவிப்பு..