செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நிறைவு விழா நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில், நவீன விளையாட்டு அரங்கத்தை சர்வதேச தரத்தில் தமிழக அரசு அமைத்தது.
ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700-க்கும் மேற்பட்ட சதுரங்க பலகைகள் தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் நிறைவு விழாவில் வெற்றி பெற்றோருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கலந்துகொள்ள உள்ளார்.
இந்நிலையில், இன்றயை தினம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை ஏற்படுமானால், மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறை இதுகுறித்து அறிவித்துள்ளதாவது:
வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதேபோன்று ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
அதுபோன்று, பிராட்வேயில் இருந்து வருகிற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள், வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.
எனவே, வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத் திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு, போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவு பெறுகிறது செஸ் ஒலிம்பியாட்; நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா