தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் ‘அவசர வழி கதவு’ உடைந்து பள்ளி சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 31 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, பள்ளி பேருந்து பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென எமர்ஜென்சி எக்ஸிட் உடைந்தது. அதன் அருகில் அமர்ந்திருந்த 7 வயது ரியோனா என்ற சிறுமி அவசர வழி கதவு (Emergency exits) வழியே கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் சிறுமிக்கு 7 பற்கள் உடைந்து முகம், கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அச்சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற வெங்கட்ராமன் என்பவர் பேருந்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்த சில நபர்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிறகு, சிறுமியின் பெற்றோர்களிடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பீர்க்கன்காரனை காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளி பேருந்து முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
சமீபத்தில், கேரள மாநிலத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ”கின்னஸ் சாதனை” படைத்த ஜான் சீனா !