அதிமுக பொதுக்குழுவை நடத்த இன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக கட்சியின் ஒற்றைத்தலைமை குறித்தும் மற்றும் 23 தீர்மங்கள் நிறைவேற்றுவது தொடர்பாகவும் இன்று (ஜூலை 11) பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 07) அன்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் பதில் மனுவை தாக்கல் செய்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை, பொதுக்குழு கூட்டத்தை அறிவிக்கும் உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 உறுப்பினர்கள், அதாவது 82 சதவீத உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு தரப்பினரது வாதங்களையும் விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (ஜூலை 11) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு கூட்டத்தை நடத்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதால், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்ததுடன், கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டவுடன் மகாராஷ்டிரா முதல்வர் ஆலோசனை