தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தமிழக வானிலை மண்டலம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகத்தின் பல இடங்களில் மந்தமான வெப்பநிலை நிலவி வந்தது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
சென்னையில் பெய்த மழை..
இந்த நிலையில், நேற்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நல்ல மழை பெய்தது. ஐந்து மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையானது இரவின் பிற்பகுதியில் தீவிரமடைந்து பலத்த மழையாகப் பெய்தது.
கோயம்பேடு, காசிமேடு, ஆலந்தூர், தரமணி, தாம்பரம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், ஆல்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மழை நின்றும் தண்ணீர் வடியாத இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பீச் ஸ்டேஷன் செல்லும் ரயில் சேவைகளும், தண்ணீர் தேங்கிய சாலைகளில் பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசியதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த விமானங்கள் ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் தரையிறங்கின.
நேற்று பெய்த மழையானது அதிக பட்சமாக மேற்கு தம்பரத்தில் 130 சென்டி மீட்டரும், தரமணியில் 113 சென்டி மீட்டரும், பொத்தேரியில் 95 சென்டி மீட்டரும், கொட்டிவாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 89 சென்டி மீட்டரும் பெய்துள்ளது.
சென்னையினைப் பொறுத்தவரை ஜூன் மாதங்களில் பெய்யும் மழையானது மிகக் குறைவாகவே இருக்கும். நேற்று பெய்த மழையின் மூலம் இந்த மாதம் பெற வேண்டிய சராசரி மழையின் அளவினை சென்னைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் 48 மணி நேரங்களுக்கு சென்னையில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று போல இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.
தமிழகத்தினைப் பொறுத்த வரை இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் பரவலான மழையினை எதிர்பாக்கலாம்.
பரவலான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் குடையினை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீங்கள் நலமா இருக்கீங்களா..? உங்கள் கண்களே உண்மையை சொல்லிவிடும்…