ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, பெசன்ட் நகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர்.
தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக இருக்கிறது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய கட்டங்களை கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு 383-வது சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இரு தினங்களிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக வாகனங்கள் அனைத்தும் 16-வது குறுக்குத் தெரு வழியாக 2-வது நிழற்சாலை நோக்கி திருப்பிடவிடப்பட உள்ளது. 3வது மெயின் ரோட்டில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 3-வது மெயின் ரோடு மற்றும் 2ஆவது நிழற்சாலை சந்திப்பில் வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் “செல்ஃபி பூத்”கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ஆக. 21-ம் தேதி அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.