சென்னை: கிண்டி, கத்திப்பாராவில் மாநகர பேருந்து மோதி, வழிகாட்டி பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து நேற்று (ஆகஸ்ட் 7) மதியம் 3 மணி அளவில் சென்றது. இந்நிலையில் ஆலந்தூர், கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு செல்ல, சாலை வளைவில் திரும்பிய போது, நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை மீது மோதியது.
இதைத் தொடர்ந்து, பெயர் பலகை தாங்கியிருந்த தூண் சாலையின் இருபுறமும் விழுந்தது. அப்போது, அவ்வழியில் சென்ற வாகனங்களின் மீது விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், மாநகர பேருந்தில் பயணித்த சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, படுகாயம் அடைந்த அந்த நபர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பரங்கிமலை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்; கண்டுகொண்ட அமைச்சர்