சென்னை: அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 14) மதியம் 12.15 மணிக்கு சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 3 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்தப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.