சென்னை: சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 30) நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையின் படி:
ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை, ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், வரும் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மகாலிங்கபுரத்தில் 3 செ.மீ., மழையும், மதுரை மாவட்டம், மேட்டுப்பட்டியில் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
30.09.2022 இன்று தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகள் ,மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா ,இலங்கை கடற்கரை பகுதிகள் ,தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதையும் படிங்க: சென்னையில் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு – மேயர் சொன்ன தகவலால் மக்கள் நிம்மதி
இந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.