கல்லூரி செமஸ்டர் தேர்வில் சாதி ரீதியான கேள்வி இடம்பெற்றதற்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்ற கேள்வி இடம் பெற்று பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி எழுப்பப்பட்டது குறித்து தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
வினாத்தாளில் எழுப்பப்பட்ட இந்த கேள்வி குறித்து விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க விசாரணை குழு ஒன்றை நியமித்து தமிழக அரசு ஜூலை 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெரியார் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டதன் அடிப்படையில், மன உளைச்சல் ஏற்பட்டிருப்பின் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இனி வரும் களங்களில் இவ்வாறான சர்ச்சைக்குரிய வினாக்கள் எழாதவாறு வினாத்தாள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் பெரிய பல்கலைக்கழகத்தில் நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் நிரந்தர துறை தலைவர்கள் யாரும் இல்லாததால் பொறுப்பு பதவிகளின் வழியே பல்கலைக்கழம் செயல்பட்டு வருகிறது.
இதனால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எது தாழ்ந்த சாதி?- விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு.