பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று புதுச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் பெருமளவு மக்கள் அரசுப் பேருந்துகளையே உபயோகிக்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பயணத்தின்போது சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என பலர் காத்திருந்தனர். இச்சூழலில், பெண்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்துள்ளது. இந்தத் திருத்தத்தை அரசு தனது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை நோக்கி பயணிக்கும் போது ஆண் பயணி, முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல் புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்தால் நடத்துநர்கள் எச்சரிக்கை விடுத்து இறக்கிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்துக் கழகம், நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.