கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடை, தமிழக சட்டப்பேரவை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், ‘வள்ளி கும்மி’ ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 8 ஆண்டுகளில், 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திலிருந்து சொத்து பங்கீடு வரையில் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில், தமிழகத்தில் 6,600 மருத்துவ பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். விவசாயிக்கு கவுரவம் கொடுத்துள்ளோம்; தமிழகத்தில், முத்திரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்று உறுதியளித்தார்.
தமிழகத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கருமுட்டை விற்பனை என பல புதுவித குற்றங்கள் நடக்கின்றன. மாநிலம் இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசம் வரையில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது என திமுகவினர் காமெடி செய்கின்றனர்.
2024ல் இந்தியாவின் துணைப் பிரதமராகலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் முதலமைச்சரான பின் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். இதுநாள் வரை 9 மாதங்களாகியும் ஒருவர் கூட பதில் கடிதம் போடவில்லை என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு தொடங்கி, ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு, திமுக பெயர் வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில் திமுக சிறந்து விளங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையறிந்து கச்சத்தீவை மீட்போம் என திமுக நாடகமாடுகிறது. ராணுவ படைகளில், உலகளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபாத் திட்டம் என்றார்.
மேலும், தமிழகத்தில் தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு சலித்துவிட்டது. மத்தியில் 8 ஆண்டுகள் முடித்தும் யாருக்கும் சலிப்பு ஏற்படவில்லை என்றார். மேலும், அடுத்த சட்டமன்ற தேர்தல் எப்போதும் வரும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டதாக கூறிய அவர், குண்டூசி அளவிற்கு கூட மத்திய அரசை குற்றம் சாட்ட முடியாது என்றார். பா.ஜனதா ஆட்சியுடன் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை ஒப்பிட்டால், ஏணி வைத்தால் கூட எட்டாது என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தினைத் தள்ளிவைக்க ஓபிஎஸ், இபிஎஸ்ஸிற்கு எழுதிய கடிதம்!! அடுத்து நடக்கப்போவது என்ன?!